Tuesday 23 May 2017

பேராண்மைகளுக்கு ஒரு செய்தி

பெண்ணெனப்

பிறந்துவிட்டோம் என்பதாலேயே

பிய்த்தெறிகிறீர்கள் சிறகுகளை.

அணிந்திருக்கும் ஆடைகளை

அவிழ்த்தெறிந்த உங்கள் அராஜகம்

குழந்தையென்றும் பாராமல் 

குருதி சுவைக்கிறது.

இளித்தபடி நெருங்கும் உங்கள்  வாயோரங்களில்

நீண்டிருக்கும் பற்களில்

சிக்கிக் கொண்டிருக்கும் சதைத் துண்டுகளில்

உங்கள் தாயின் வாசனை

நுகர மறந்தீரோ?

அண்ணாவென்றோ

மாமாவென்றோ

அன்போடழைத்த மழலையின்

அடிவயிறு தடவும் உங்கள் பேராண்மை

குறித்து

சிலாகித்து சிரித்திடுங்கள் உங்களுக்குள்ளாகவே.

சிதைக்கப்படும் பெண்ணினம் 

பிறப்பின்றிப் போகட்டும் இனியும்.

உங்கள் இச்சைக்குப் பெண்ணுரு தேடி

காடுகளில் திரிந்தலையத் தயாராகுங்கள்

பேராண்மைகளே.

No comments:

Post a Comment