Tuesday 16 February 2016

பற்றுதல்...

ஒவ்வொருவர்க்கும்
பற்றிக்கொள்ள ஏதோவொன்று கிடைக்கத்தான் செய்கிறது.
பொழுதுகள் தள்ள எதையாவது பற்றிக்கொள்ளல் நலம்.
அதிகாலை விழிக்கையில்
அதுவாய் வந்து பற்றும்
முந்தைய நள்ளிரவில் கேட்ட
ஸ்வர்ணலதாவின் எவனோ ஒருவன்...
யாருமற்ற வேளை
சமையலறையில் எழும்பும்
குக்கரின் விசில் எண்ணிக்கை...
மதிய பொழுதுகளில்
எங்கோ யார் வீட்டிலோ ஓடும்
கிரைண்டர் ஓசை...
அயர்ந்து பின் விழிக்கும் தருணம்
பக்கத்து வீட்டில் ஒலிக்கும் அழைப்புமணி ஒலி...
இப்படி பற்றிக்கொள்ள
எத்தனையோ இருக்க
எப்போதும் மௌனத்தைப் பற்றுதல் அவசியமாய் இருக்கிறது
வாழ்வின் பெரும்பகுதி கடக்க.

அம்மா, அன்னை தெரியும். மாதா தெரியுங்களா?

மாலை அலுவலகம் விட்டு வெளிவர இயலவில்லை. சாலையில் போக்குவரத்து நெரிசல். சிலநேரம் முடங்கியும் போனது. ஆட்டோக்களை நிற்கவிடவில்லை காவல்துறை. காக்கிச்சட்டையைக் கண்டதும் அவர்களும் நிற்கவில்லை. நின்ற ஒருவரும் எப்போதும் நூற்றுப்பத்து ரூபாய் (அதுவே கொள்ளை தான்) கொடுக்கும் தூரத்துக்கு இருநூறு ரூபாய் கட்டடணம் கேட்டார். பள்ளி முடிந்து குழந்தைகளை அழைத்து வரும் வாகனங்களும், அலுவலகம் முடிந்து செல்வோரும் பணிமுடிந்து திரும்பும் இதரரும் ஒருவித பீதியோடு போக்குவரத்தைப் பார்த்தபடி பேருந்து கிடைக்காமலும் ஆங்காங்கே தேங்கி நின்றனர்.
அப்படி என்ன நிகழ்வு?
ஏதும் மக்கள்நலத்திட்ட முகாமா?
அரசு விழாவா? சமூகநலப் பணிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வா? ஏதும் நிவாரணப் பணியா?
-----------------------------
-----------------------------
தேசியக்கல்லூரி வளாகமே நிரம்பிவழியக் காரணமென்ன?
-----------------------------
-----------------------------
நான்கு நாட்கள் நடக்கவிருக்கும் அதிமுக்கிய நிகழ்ச்சி தான் என்ன?
-----------------------------
-----------------------------
ம்ம்ம்! அது வந்து...
            அது வந்து...
-----------------------------
------ மாதா வர்றாங்களாம்
------ யாரு?
------ அம்மா, அன்னை தெரியும்.
------ இது யாரு மம்மி சாரி மாதா?
------ இவங்க
             மாதா அமிர்தானந்த மயி
             ரொம்ப சக்தி வாய்ந்தவங்க
              .
              .
              .
              வெளங்கிடும்...


கண்ணாமூச்சி

வேடிக்கையாய்த் துவங்கினோம்
இந்தக் கண்ணாமூச்சி விளையாட்டை.
ஒருவருக்குள் மற்றொருவர்
ஒளிந்துகொண்டதை அறியாததுபோலவே
தேடும்பாவனை சலிக்கவேயில்லை.

Monday 15 February 2016

என் பிரியசகாவே!

கரங்கள் கோர்க்கும்வேளை
லேசாய் விரல் நெறிக்கும் உன் பிரியம்.
வலிக்காதென்பதறிந்தே
வலிக்கிறதா என வினவும் குறும்பு.
என் விழி தாழ வைக்கும் முயற்சியாய்
குறுகுறு என முகம் நோக்கும் விஷமம்.
நாணம் தேடும் முகத்தான்
படக்கென்று கண்ணடித்து
நாக்கை உள்மடித்து
நீ  என் ஆளெனக் காட்டத் துடிக்கும்
அன்பான ஆளுமை
.
.
.
இன்னும்
இன்னும்
ஏதேதோ  உன் அதீத அன்பைக்கூறும் தன்முயற்சிகள்
தன் வெற்றிதனை அறியாது
விக்கிரமனாய்
என் எதிரே நீ.

Friday 5 February 2016

வழி பார்த்து, விழி வைத்து...

கிளம்பட்டுமா
என்று வினவிப்
புறப்படும்போதெல்லாம்
ஒரு புன்னகையை மட்டும் கொடுத்துவிட்டு
ஒட்டுமொத்தமாய்
உயிரை அள்ளிச் செல்கிறாய்.
உயிரற்ற உடலோடு தலையசைக்கையில்
உன் புன்னகையின் சக்தியில்
கொஞ்சமாய் உயிர் ஒட்டிக்கொள்கிறது.
மீண்டும் நீ திரும்பிவரும் நாள் பார்த்து
ஊசலாடும் உயிரோடு காத்திருத்தல்
இயல்பாகிப் போனது.