Saturday 24 September 2022



காலையில் இருந்து அழைப்புகள் ஏற்கப்படாமல் இருக்கின்றன
அண்மையில் பிறந்த பூனைக்குட்டியென கண் திறவாமல் கிடக்கிறேன்
யாரோ தேடியிருக்கிறார்கள்
யாரோ வருவதற்கு இருக்கிறார்கள்
யாரோ விட்டுச் செல்ல விழைகிறார்கள்
எந்தத் தகவலையும் ஏற்க இயலா மனநிலை
பல்லாங்குழிச் சோழிகளென
தொண்டைக்குழியில் நெருடுகின்றன
வண்ண வண்ண மாத்திரைகள்
திறவாத இமைகளை இன்னும் இறுக மூடிக் கொள்கிறேன்
அன்பின் நிமித்தம் யார் வந்தாலும்
வலி குடையும் என் கால் பாதங்களை
போர்வையால் மூடிவிட்டுச் செல்லுங்கள்
நம் இத்தனை நாள் பழக்கத்திற்கு இந்தச் சகாயம் போதுமெனக்கு