Sunday, 30 December 2018

கட்டு என்ன வெல பாட்டீ?

ஆங்! பாஞ்சு ரூவா?

அட! போன மாசம் பத்துரூபான்னு தானே குடுத்தீங்க? இப்ப என்ன பதினைஞ்சு?

( பொதுவாக காய்கறி கீரை விற்பவர்களிடம் பேரம் பேசுவதில்லை. பாட்டியின் முகபாவம் பேச்சை வளர்க்க வைக்கும். அதற்காகவே)

அதெல்லாம் வெல ஏறிப்போச்சு ஆயா.

க்கும். என்ன கொல்லையில விளைய வக்கிறீங்களா, வேலில வெளஞ்சு கெடக்குறது தானே.

ஆங்! அப்டீனா கல்லு முள்ளு கிளிக்க நீயே போய் பறிச்சுக்க‌. டெப்பார்ட் கடைல ( departmental store) இந்த கேள்விய கேட்ருவியா? முளுசா முன்னூறு ரூவா சொன்னாலும் வாங்குவிய. இங்க வந்தா சட்டநாயம் பேசுவீங்க.

முறுக்கிக் கொண்டு முகம் திருப்பிக்கொண்ட பாட்டியின் கோவத்தை ரசித்தவாறே ஆறு கட்டு 90 ரூபாய் கொடுத்து வாங்கியவளுக்கு ஒரு பத்து ரூபாய் கட்டு வல்லாரையை சேர்த்து திணித்து அனுப்பினார்.

ஆறு கட்டு ஆவாரம்பூ கீரை. மாலை அமர்ந்து ஆய்ந்து முடித்தாயிற்று. ஆனால் கீரைக்கார பாட்டியின் வார்த்தைகள் மனதை இன்னும் ஆய்ந்து கொண்டே இருக்கிறது.

எப்போதும் தனித்திருப்பதேயில்லை.
உன் சொல்லொன்று செவியோரத்தில்.
உன் பார்வையொன்று
விழியோரத்தில்.
உன் விரலொன்று பிணைத்தபடி.
உன் கோபமொன்றில் அஞ்சியபடி
உன் தொடுகையில் கரைந்தபடி
உன் அழுகையில் கலங்கியபடி.
எப்போதும் எப்போதும்.
தனித்திருப்பதேயில்லை
ஒருபோதும். 💜

எங்கள் வீட்டில் எப்பவுமே பிள்ளையாரெல்லாம் கிடையாது. அப்போதெல்லாம் மனைப்பலகை எடுத்துட்டுப்போய் பிள்ளையார் உருவத்தை களிமண் அச்சில் வார்த்து வாங்கிவந்ததைப் பார்த்திருக்கேன். அக்கம்பக்கத்திலிருந்து இனிப்பு பூரணமும் கார உளுந்து பூரணமும் வைத்து செஞ்ச கொழுக்கட்டை வரும்.
பிள்ளையாரை இந்த அளவிற்கு தான் தெரியும். திருவிளையாடல் படத்தின் மூலம் கொஞ்சம் கூடுதலாக.

இன்று அலுவலகம் போய்ச் சேருவதற்குள்‌ பிரம்மாண்ட பிள்ளையார் ஏழெட்டு பேர் முக்குக்கு முக்கு உட்கார்ந்து இருக்கார். அவர்களுக்கு முன் மூஞ்சூறு சைசிலும் நிறத்திலும் நாலைந்து பொடியன்கள் துண்ணூறு பூசிக்கொண்டு. மனதைத் தைத்த விஷயம் ஒருவன் கூட வெளுப்பா இல்லை. திருத்தமான உடையோடும் இல்லை.

அப்பொடியன்களின் பெற்றோரிடம் சொல்ல விரும்புவது

" போங்கடா! போய் புள்ளகுட்டிகளைப் படிக்க வைங்க"

பேரறிஞர் அண்ணா..

அவர் பெயரில் கட்சியை வைத்துக் கொண்டு, அவர் முன்னெடுத்த மாநில சுயாட்சியை முற்றிலும் கைவிட்டு, மாநில உரிமைகளை தம் சுயநலத்துக்காக நடுவன்(?) அரசிடம் அடகு வைக்கும் இன்றைய அரசியல்வாதிகளுக்கு, அண்ணாவின் சிலைக்கு மாலையணிவிப்பது மட்டுமே இன்றைய அதிகபட்ச செயல்பாடாக இருக்கிறது.

தேர்தலில் நிற்பது என்று கொள்கையளவில் முரண்பட்ட போதும் அய்யாவின் கொள்கைவழி நின்று ஆட்சி நடத்தியவர்.

தந்தைபெரியாரோடு தாம் பயணித்த நாட்களை  " எனக்கென்று ஒரு வசந்தகாலம் இருந்தது"  என்றே அண்ணா குறிப்பிடுவார்.

ஆம்.
தமிழகத்துக்கென்று ஒரு வசந்தகாலம் இருந்தது.
அக்காலத்தில்தான் சென்னைமாகாணம்     "தமிழ்நாடு" என்ற பெயர்சூட்டப்பெற்றது.

பேரறிஞரின் பிறந்தநாளில் அவர் முன்னெடுத்த கொள்கைகளை சிறிதேனும் நினைவு கூர்வோம்.

பொதுவில் பேசியதையே இல்லையென்று சொன்னவர்கள் புராணங்களில் எவ்வளவு புளுகியிருப்பார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

#பெரியார்_140

எந்த ஆண்டையும் விட தந்தை பெரியாரை நினைவு கூர்வதும் அவர்தம் கொள்கைகளை முன்னெடுப்பதும் இன்று கூடுதல் தேவை பெறுகிறது.

பிள்ளையாரை வைத்துக் கலகம் செய்பவனை விட அவனைத் தலையில் வைத்துக் கொண்டாடும் பாமரனுக்குப் புரியவைக்க, நம்மை கோவிலுக்குள் புக அனுமதிக்காதவன் தெருப்பிள்ளையாருக்குக் காவலிருக்க வைக்கிறானே அதன் சூட்சுமம் என்ன என்று அந்த ஏழைச் சிறுவர்களுக்கு உணரவைக்க பெரியாரை அவனுக்கு அறிமுகப்படுத்துதல் அவசியமாகிறது.

அந்தப் பிரம்மாண்ட பிள்ளையாரை தொட்டு தூக்கி நீரில் கரைய வைக்க பிரயத்தனப்படும் இளைஞர்களிடம் 
" உங்களை இதேபோல் தொடுவதற்கோ, தொழுவதற்கோ கோயில் கருவறைக்குள் அனுமதிப்பதில்லையே ஏனென்று எப்போதேனும் சிந்தித்தீர்களா?" என்று கேட்டு அவர்களை சுயமரியாதையோடு வாழவேண்டும் என்ற அடிப்படைச் சிந்தனையை ஊட்டுவதற்காக பெரியாரை முன்னிறுத்துவது இன்றியமையாததாகிறது.

ஒரு அரசியல் தலைவரை, முன்னாள் முதல்வரை, வயதில் முதிர்ந்தவரை நள்ளிரவில் குண்டுக்கட்டாகத் தூக்கி தாக்கி கைது செய்யும் வல்லமை பெற்ற காவல்துறை கைது செய்யவேண்டிய ஒரு கயவனுக்குத் காவல் நின்ற அவலத்தின் பின்னுள்ள காரணங்களைக் கண்டுணர நாம் பெரியாரைத் தூக்கிப் பிடிக்க வேண்டியது தேவையாகிறது.

தமிழகத்தின் ஒப்புயர்வற்ற அரசியல் தலைவனொருவனின் மரணத்தை எதிர்பார்த்துக் குதூகலித்துக் காத்திருந்த ஈனத்தனத்தினை உணர்ந்து சுதாரிக்க நாம் பெரியாரைப் பரப்புதல் தேவையாகிறது.

அத்தலைவனின் உடலைப் புதைத்துத் திரும்புவதற்குள் மெரீனா தீட்டுப்பட்டதாகக் கவலைப்பட்ட வன்மத்தை எதிர்கொள்ள வேறெப்போதையும் விட பெரியாரைத் துணைக்கோடல் இன்றைய காலத்தின் புறக்கணிக்கவியலா அரசியல் தேவையாகிறது.

இன்று "ஹைகோர்ட்டாவது.. மயிராவது..?
போலீஸ் டிபார்ட்மெண்ட் கரெப்ட் ஆயிடுத்து.. நான் தரேன்யா லஞ்சம்.." என்று பொதுவெளியில் எக்காளமிடும் திமிர்த்தனத்தின் பின்னணியை அம்பலப்படுத்த பெரியார் என்றைக்கும் தேவையாகிறார்.

#பெரியாரைப்_படிப்போம்
#பெரியாரைப்_பின்பற்றுவோம்
#பெரியாரைக்_கொண்டாடுவோம்
#பெரியாரைப்_பரப்புவோம்

உங்களைத் தூண்டி உணர்வுபூர்வமாக உசுப்பேத்தி விடுபவன் எவனும் இந்தத் தரங்கெட்ட வேலையைச் செய்ய முன்வருவதில்லை என்பதை எப்போது உணரப்போகிறீர்கள்?

#பெரியார்_சிலை_மீது_ஷூ_வீச்சு