விசும்பின் பெருவெளியில்
இலக்கற்று உலவும் சிறுதூசினைப் போல்
பிரபஞ்சமெங்கும் பயணிக்கும் பொருளற்ற மன எண்ணங்கள்.
சிறுபுள்ளின் நினைவொன்றில்
வானளக்கும் கனவுகள் சிதைக்கப்பெற்றுக்
கூடடையும் பொழுதொன்றிலாசை துளிர்க்கும்
நாளையேனும் வானளக்க.
இரைதேடும் நீண்ட பயணத்தில் நினைவில் வந்துபோகும்
நேற்றுத் தவறவிட்ட
தாமரைக்குளத்து மீன்.
இறக்கை விரிக்கும் ஆசை குறுக்கி
சிறகு மடக்கி
சேற்றுக் குளத்தில் இறங்கித் தேடும்
சிறு புள் நானே.
06.06.2016
Monday, 6 June 2016
Friday, 3 June 2016
மழையடித்து ஓய்ந்த பொழுதொன்றில்
ஆசுவாசமாய் அமர்ந்து
வேடிக்கை பார்த்த கருங்கல் திண்ணை.
நீண்ட திண்ணையின்
ஒருமுனையில் நீயும்
மறுமுனையில் நானுமாய்.
நம் மவுனமொழி உரையாடலின்
தூதாய்
வரிசைகட்டிய எறும்புகளின் ஊர்வலம் நமக்கிடையே.
எறும்பு சுமந்த ஒற்றைக்கடலையை
பிடுங்கி எறிந்த அம்மாவின் பார்வை
பறித்து எறிந்தது நமக்கான மொழிகளையும்.
Monday, 16 May 2016
Tuesday, 10 May 2016
ஒரு அடர்மழைக்குத் தயாராகிறது வானம்.
வெளுப்பு குறைந்து கருமை சேர
முழுதான மழையென்று அறிவிக்க
குளிர்காற்றை துணைக்கு அழைக்கிறது.
வீசும் காற்றில் ஆடும் இலைகளில் பரவசம்.
கொடியில் காயும் துணிகள் எடுக்கும் அவசரம் வீட்டில்.
எட்டி நடையைப்போட்டு,
வாகனத்தின் வேகம் கூட்டி
விரையும் மனிதர்கூட்டம் வீடடைய.
விழவிருக்கும் முதல் மழைத்துளி ஏந்தும் விழைவோடு
சாளரத்தின் வெளியே கரங்கள் நீட்டிக்
காத்திருக்கிறேன்.
எங்கோ ஒரு சாளரத்தின் வழியே
நீண்டிருக்கும் உன் கரங்களும்.
விழுந்த முதல் மழைத்துளி
நம் உயிர்த்துளியாய்
நீ அன்றொரு நாள் சொன்ன வார்த்தையின்
நம்பிக்கையை இன்னும் ஆழமாய் விதைக்கும் உயிருக்குள்.
உள்ளங்கையில் நிறைந்த மழைநீரில்
உன் முகம் பார்த்துப் புன்னகைக்கிறேன்
எங்கோயிருந்து எனக்கு நீ தந்த
புன்னகைக்கு பதிலாய்.
மழை பெய்து கொண்டேதானிருக்கிறது
காதலில் கனிந்த
மனசுக்குள் எப்போதும்..
Friday, 6 May 2016
காதலின் துவக்கப்புள்ளி
நினைவுகளின் அடுக்கிலிருந்து
போகிற போக்கில்
ஒற்றை இழையை உருவிவிட்டுப் போகிறாய்.
சீட்டுக்கட்டெனச் சரிந்து
எங்கும்
சிதறிக்கிடக்கின்றன நினைவுத்தளங்கள்...
சேகரித்து அடுக்க விழைகின்றேன்
ஒவ்வொன்றாய்.
எடுக்க எடுக்க
நினைவின் கனம் நெஞ்சுக்குள்
கூடுகிறது.
நினைவலைகளில்
நெளிகின்றன
அவை நிகழ்ந்த பொழுதுகள்....
ஒவ்வொரு அடுக்கிலும்
ஒளிந்துகொண்டிருக்கும்
உன் நினைவுப் புள்ளிகள்
வெளிக்கிளம்புகின்றன.
புள்ளிகளின் எண்ணிக்கை
கூடக் கூட
நீ என்னை வியாபிக்கத் துவங்குகிறாய்.
உன்னைத் தவிர்த்து வேறொன்றைத்
தேடியெடுக்க முனைகிறேன்.
தேடத் தேட...
உன் ஆக்ரமிப்பின் உக்கிரம் கூட
முழுவதுமாய் உன்னை என்னில் நீ நிறைக்கின்றாய் ஒரு தருணத்தில்
....
களிப்புற்றுக் களைப்புற்று
நான் மதி மயங்கும் அக்கணத்தில்
விழியோரம் மின்னிச் செல்லும்
சிதறிய நினைவுத்தளங்களின்
குவியலில் புதைந்த நமக்கான கவிதையின் முற்றுப்புள்ளி.
-------------------------7/5/16
Wednesday, 4 May 2016
முடிவில்லாப் பயணமாய்...
வழியனுப்பத்தான் வந்தேனா?
நின் வழித்துணையாய்
பயணத்தில் வரும் ஆசை கொண்டேனா?
விழி விரிய ஆவல் கண்டேன்
உன்னிடத்தில்.
விழிநிறைத்த நீர் மறைக்க
கையசைத்து விடைபெற்ற பொழுதில்
மனமென்னவோ உன்னைத் தொடர்ந்தது.
வழிப்போக்கனாய் வந்தவனில்லை
என் வாழ்வில் நீ
என்றுணர்த்தியது
நம் முந்தைய ரயில் பயணம்.
அன்று
கடைசி நிறுத்தத்தில்
இறங்கிய நாம்
மீண்டும்
தொடங்க ஒரு ஒத்திகை தானின்று.
வழிகாட்டி முன்செல்லும்
நட்பின் விரல் பிடித்துப்
பின்தொடர்வேன் என்றென்றும்.
Wednesday, 27 April 2016
கோடைமழை
உன் பிரியத்தின் வாசலில் நிற்கிறேன் கரங்கள் ஏந்தி.
மொத்தத்தையும் தருகிறாய்
இதயம் திறந்து.
செய்வதறியாமல் திகைக்கிறேன்
கோடையின் வெம்மை தணிக்கும்
ஒரு குவளை நீராய் என்
உயிரை நனைக்கிறாய் தோழா.