Friday 6 May 2016

காதலின் துவக்கப்புள்ளி

நினைவுகளின் அடுக்கிலிருந்து
போகிற போக்கில்
ஒற்றை இழையை உருவிவிட்டுப் போகிறாய்.
சீட்டுக்கட்டெனச் சரிந்து
எங்கும்
சிதறிக்கிடக்கின்றன நினைவுத்தளங்கள்...
சேகரித்து அடுக்க விழைகின்றேன்
ஒவ்வொன்றாய்.
எடுக்க எடுக்க
நினைவின் கனம் நெஞ்சுக்குள்
கூடுகிறது.
நினைவலைகளில்
நெளிகின்றன
அவை நிகழ்ந்த பொழுதுகள்....
ஒவ்வொரு அடுக்கிலும்
ஒளிந்துகொண்டிருக்கும்
உன் நினைவுப் புள்ளிகள்
வெளிக்கிளம்புகின்றன.
புள்ளிகளின் எண்ணிக்கை
கூடக் கூட
நீ என்னை வியாபிக்கத் துவங்குகிறாய்.
உன்னைத் தவிர்த்து வேறொன்றைத்
தேடியெடுக்க முனைகிறேன்.
தேடத் தேட...
உன் ஆக்ரமிப்பின் உக்கிரம் கூட
முழுவதுமாய் உன்னை என்னில் நீ நிறைக்கின்றாய் ஒரு தருணத்தில்
....
களிப்புற்றுக் களைப்புற்று
நான் மதி மயங்கும் அக்கணத்தில்
விழியோரம் மின்னிச் செல்லும்
சிதறிய நினைவுத்தளங்களின்
குவியலில் புதைந்த நமக்கான கவிதையின்  முற்றுப்புள்ளி.

-------------------------7/5/16

No comments:

Post a Comment