ஒரு அடர்மழைக்குத் தயாராகிறது வானம்.
வெளுப்பு குறைந்து கருமை சேர
முழுதான மழையென்று அறிவிக்க
குளிர்காற்றை துணைக்கு அழைக்கிறது.
வீசும் காற்றில் ஆடும் இலைகளில் பரவசம்.
கொடியில் காயும் துணிகள் எடுக்கும் அவசரம் வீட்டில்.
எட்டி நடையைப்போட்டு,
வாகனத்தின் வேகம் கூட்டி
விரையும் மனிதர்கூட்டம் வீடடைய.
விழவிருக்கும் முதல் மழைத்துளி ஏந்தும் விழைவோடு
சாளரத்தின் வெளியே கரங்கள் நீட்டிக்
காத்திருக்கிறேன்.
எங்கோ ஒரு சாளரத்தின் வழியே
நீண்டிருக்கும் உன் கரங்களும்.
விழுந்த முதல் மழைத்துளி
நம் உயிர்த்துளியாய்
நீ அன்றொரு நாள் சொன்ன வார்த்தையின்
நம்பிக்கையை இன்னும் ஆழமாய் விதைக்கும் உயிருக்குள்.
உள்ளங்கையில் நிறைந்த மழைநீரில்
உன் முகம் பார்த்துப் புன்னகைக்கிறேன்
எங்கோயிருந்து எனக்கு நீ தந்த
புன்னகைக்கு பதிலாய்.
மழை பெய்து கொண்டேதானிருக்கிறது
காதலில் கனிந்த
மனசுக்குள் எப்போதும்..
Tuesday 10 May 2016
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment