Sunday 10 June 2018

கனலேந்து கண்களில்

சட்டென்று மாறும் பார்வைகளின் பொருளுணராமல் தடுமாறுகிறாள்.
எப்போதும் அணியும் உடைகளில் அசௌகரியம் புரிய
அவ்வப்போது உடைகளை இழுத்துவிடுதல் இயல்பாகிறது
சக மாணவன் உறுத்துப் பார்ப்பதுபோல் தோணுவது பிரமைதானா?
பள்ளித்தோழனின் அண்மையை விட்டு தள்ளி அமர்வதேன் சில நாட்களாய்?
துப்பட்டாவைப் போட்டாலென்ன
பாட்டியின் கேள்விகள் அதிகமாகுது.
இதென்ன குழப்பம்?
மனசுக்குள் ஏனிந்த நடுக்கம்?
என்ன நடந்தது தனக்கென்று உணராத பொழுதொன்றில்
பேருந்து நெரிசலில்
வயசு தந்த சலுகையில்
வாகாய் நெஞ்சில் கைவைத்த பெருசொன்றின் வக்கிரப் பார்வையும் வழிந்த ஆசையில் நனைந்த மீசையும் சொல்லிற்று
மொட்டென மேடிட்ட மார்பின் வனப்பதில் விளைந்த வடிவின் மாற்றமே அதுவென்று.
விழிகள் மலர்த்திப் பார்க்க
எங்கும் ஆண்கள் தத்தம் இயல்பிலிருக்க
கூனிக்குறுகிய பெண்கள்
ஒளிந்து ஒடுங்கிய மகளிர்
ஆடை கொண்டு மூடி அடங்கிக்கிடக்கும் அன்னையர்.
ஏனிந்த வேற்றுமை?
துடைத்தெறிந்தாள்
தயக்கங்களை
குழப்பங்களை
அச்சங்களை
அறியாமைகளை.
என் உயிர்
என்னுடல்
யாருக்காக இந்த வாழ்க்கை?
ஏன் சுருண்டு கிடக்க நத்தையென?
நெருப்பை ஏந்தினாள் நெஞ்சினில்.
கனல் கக்கினாள் கண்களில்.
விலகிச் சென்றன விசனங்கள்.
பாதை விரிந்தது பளீரென.
ஆடவர்தம் அன்புப்பார்வைகள் ஏற்று
வக்கிரப் பார்வைகள் வீழ்த்திப் புறப்பட்டாள் புயலென.
கைத்தடியொன்றின் துணைகொண்டு.

No comments:

Post a Comment