வழிநெடுகிலும்
பூத்தூவிய பாதை
கண்ணெதிரே தெரிந்தாலும்
குறுக்கு வழியில்
இலக்கு நோக்கி
அழைத்துச்செல்வதாய்
சேற்றிலும் சகதியிலுமே
நம் பயணம்.
இலக்கு என்பது உன் தாய்வீடுதான்
உன்னைப் பொறுத்தவரை.
தனிக்குடித்தனமிருக்கும்
உன் சகோதரிகளின் நியாயத்தில்
உருகிப்போகும் உன் மனது
அதே நிலையிலிருக்கும்
என் அராஜகத்தை கண்டிக்கும்
நீதிபதி ஆகிறது.
உன் வீட்டுப் பெண்களின்
சோகங்களனைத்தும்
எனது கண்ணீருக்கு காரணமாகின்றன.
காலையிலிருந்து இரவுவரை
ஓய்வின்றி உழைத்தாலும்
உடல் நலுங்கிக் களைத்தாலும்
உதவிக்கு வராத உன் விரல்கள்
ஊர் உறங்கும்வேளை
என் உதவிதேடிச் சுரண்டுவதும்
ஓய்வதில்லை.
அனைத்தையும் பொறுத்தாலும்
நம்மிடையே வாக்குவாதங்கள்
முற்றும் வேளை
உன் குழந்தைகளை விட்டுவிட்டு
வெளியேறச் சொல்லும்
உன் கயமையை மட்டும்
பொறுப்பதற்கில்லை கணவனே.
ஒருமுழம் கயிற்றுக்கு அஞ்சிய
பெண்மகள் நேற்றோடு
தொலைந்தொழிந்தாள் என்பதறியாத
உன் அறியாமையின்மீது
கொஞ்சம் இரக்கத்துடனே
ஒன்றை நினைவூட்டுகிறேன்.
உன் வீட்டுப் பெண்களைப்போல்
நானும் உதிரம் கொட்டித்தான்
நீ பெருமிதம் கொண்டு போற்றும்
உன் வாரிசைப் பெற்றேன்.
Tuesday, 1 March 2016
பயணம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment