Saturday, 6 May 2017

வெற்றுப்பொழுதெனக் கடக்கவில்லை.
வீணில் ஒரு கணம் இழக்கவில்லை.
நேற்றைப்பொழுது போதாமல்
இன்றில் கொஞ்சம் எடுத்துக்கொண்டேன்
நேற்றைய நாளையிலிருந்து.
இன்று போதுமா தெரியவில்லை.
நாளை கிடைக்குமா
நம்பிக்கையோடு எட்டிப்பார்க்கிறேன்.
அருகேயிருந்தது அண்மைவிட்டுக்
கொஞ்சம் தூரம் தள்ளி...
அடடா!
நாளை என்பது என்றுமில்லையாம்.

17/4/!7

வெய்யில் என்னைச் சுட்டெரிக்கவில்லை
தலைக்குமேலே வானம் ஏந்தி நடக்கிறேன்.
மேகங்களால் மூச்சுத்திணறலில்லை
கைகள் வீசி முன்னேறுகிறேன்.
காற்று என்னைக் கட்டுப்படுத்தவில்லை.
இடியிடித்து மழைபொழிவதற்கான
அறிகுறிகள் ஏதுமில்லை.
வெள்ளை வானம்
கந்தக பூமி
கனல்காற்று
எதுவும் இடையூறில்லை.
கதிரவன் கக்கும் ஒளியினின்றும்
ஒருபிடியளவு சேகரிக்கிறேன்.
செல்லும் பாதையில் இருள்வரலாம்
என் சந்ததிக்கு பாதையில் ஒளியேற்றும் பொருட்டும்.
வழித்தடத்தில் பிள்ளைகட்கு
உணவு சமைக்கவும்.
எதன்பொருட்டும் என் பயணம்
தடைபடாத முன்னேற்பாட்டில்
முன்வைத்த அடியை
முன்வைத்தே செல்கின்றேன்.
பின்தொடரும் என் பிள்ளைகட்கு
ஒளியாய், உணவாய்,
வழித்தடமாய் நானே.
என் பயணம் முடிவுறும் பாதையில்
என் மக்கள்  ஏந்துவர்
ஒளியையும் நெருப்பையும்.
பயணங்கள் முடிவுறத் தேவையில்லை
புவியுள்ள மட்டிலும்.

7/4/17

புலியொன்றைப் புறந்தள்ளி
சிறுத்தையின் வால்பிடித்து வீசியெறிந்து
குரங்கின் கழுத்தை நெரித்து
கரடியின் காதினைக் கிள்ளியவாறே
உறங்கிக்கொண்டிருக்கிறான்
வீரமகன் வெற்றிமாறன்.
விலங்குகளனைத்தும்
சுற்றிக் காவல் நிற்க
ஐவருக்குமாய் பால் குவளையை
நிரப்புகிறேன் நான்.

3/4/17

என்னிடம் கொட்டிக்கின்றன மௌனங்கள்.
கேட்கும் செவியுளதா உன்னிடம்?

03/04/2017

Saturday, 15 October 2016

பார்வைகள்

வீடு நுழைந்ததும் கழற்றியெறிகிறேன்
ஒவ்வொன்றாய்.
காலையில் வாசலில் கால்வைத்ததும்
ஒட்டிக்கொண்ட முதல்பார்வையை.
வாகனம் ஓட்டிச் செல்லுகையில்
இடதுபக்கமிருந்து படிந்த
இன்னொரு பார்வையை.
அலுவலகத்தில்
வந்துபோன வாடிக்கையாளரின்
வக்கிரப் பார்வையை.
திரும்பி வருகையில்
தினந்தோறும் சந்திக்கும்
தினுசான பார்வைகளை.
முச்சந்தியில் முறைப்பதுபோலும்
வெறித்த பார்வைகளை.
இப்படி கையில்
முகத்தில்
முதுகில்
என
உடலெங்கும்
ஒட்டிக்கொண்ட பார்வைகளைப்
பிய்த்தெறிந்தேன்.
ஆனால்
காலையில் கிளம்பும் வேளை
வீட்டிலேயே ஒட்டிக்கொண்ட
கண்காணிப்புப் பார்வையைக்
கழற்றியெறியவே முடியவில்லை
கடைசிவரை.
                                15/10/2016

Wednesday, 12 October 2016

அவசர சமையல் அறிவது அவசியம்

ரசம்

ரசமில்லா
நவரசமில்லா வாழ்க்கையில் ஏது இனிமை?

பேச்சிலர் ரசம் வைப்பது எப்படின்னு தெரிஞ்சுக்கலாமா?

5 நிமிடம்தான்.

மிக்சியில் ஒரு எலுமிச்சையளவு புளியை உருட்டாம பிச்சி பிச்சிப் போட்டு, மிளகு, சீரகம் தலா ஒரு ஸ்பூன் போட்டு, லேசா ரெண்டு ரவுண்டு ஓட்டி, பின் பூண்டு 4 பல், வரமிளகாய் 2 தக்காளி ரெண்டு (கட் பண்ணி) போட்டு ரெண்டு ரவுண்டு ஓடவிடுங்க. அவ்வளவுதான். மிக்சியில் அரைச்ச விழுதை பாத்திரத்தில் கொட்டி தண்ணீர் விட்டு கொதிக்கவச்சு தாளிச்சா ரசம் ரெடிங்க.
மல்லி, கறிவேப்பிலை போட்டு இறக்குங்க.
மறக்காம உப்பு சேருங்க.

புளி ஊறவைக்கக்கூட நேரமில்லாத சமயத்தில் இது எளிமையான முறை.

Friday, 26 August 2016

அரவங்களினூடே...

மண்கிளர்த்தி துளிர்த்தது அந்தச்செடி
மொத்தம் மூணு இலைவிட்டு.
தளிரின் மென்மை தூண்டியதாய்
சற்றே தீண்டிப்பார்த்தது அரவமொன்று.
வளர்ந்து செழித்தது செடி
மொட்டுகள் தூண்டியதாய்
முகர்ந்து தீண்டியது அரவமொன்று.
பூத்துக்குலுங்கி புன்னகை செய்தது.
வண்ணங்கள் தூண்டியதாய்
வலிந்து தீண்டியது அரவமொன்று.
காய்த்துக் கனிந்த தருவாய்
நின்றது.
செழுமை தூண்டியதாய்
சிறிதே உரசித் தீண்டியது அரவமொன்று.
ஆணிவேரூன்றி
அடர்ந்து கிளைத்துப் படர்ந்து நின்றது விருட்சமாய்.
நிழலின் இதத்தில்
வாகாய்த் தங்கி
வசதியாய்த் தீண்டியது அரவமொன்று.
அரவங்கள் தீண்டுந்தோறும்
அரவமெழுப்ப வழியற்று அமைதிகாத்த விருட்சத்தை
ஆதித்தரு என்றே போற்றி
ஆலயம் எழுப்பிட்டார்.
அங்கே
அர்ச்சனை செய்யவும்
அரவமொன்று வந்தது.

                       24/8/2016