Monday, 29 July 2019

இறுக்கமான பொழுதுகளில்
எனக்குள் எளிதில் நுழைந்துவிடும் லாவகம்
இதுவரை கைவரப்பெறவில்லை உன்னையன்றி மற்றவர்க்கு.
ஏதேதோ புலம்பித் திரியும் மனதுக்கு
புன்னகையால் ஒரு கடிவாளம் போடுகிறாய்.
தனிமை தேடி அமரும்வேளை
ஓயாத உன் பேச்சுக்களால் திசைதிருப்பும் உன் வன்முறை
மன்னிக்கத்தக்கதல்ல.
பசி மரத்துப்போனவேளையில்
பார்வையில் எனை உயிர்ப்பித்துப் பரிமாறும் உன் அன்பைப் புறக்கணிக்கும்
என் சினத்தையும் சேர்த்தே செரிக்கிறாய் நீ.
எத்தொலைவு போனாலென்ன
அருகில் உன் ஆரவார அன்பின் மழை பெய்துகொண்டே இருக்குமென்ற நம்பிக்கையில்
உன்னை உதறிச்செல்லவும் எத்தனிக்கும் என் பிடிவாதம்
உன் ஒருதுளி மௌனத்தில் தளர்ந்துபோகிறது.
எதுவாயினும்
எப்பொழுதாயினும்
எதற்காகவேனும்
உன்னோடு பொழுதைக் கழிக்கவியலா ஆற்றாமையில்
வெந்து தவிக்கும் இதயத்தின்
வெற்றுக் கூச்சலை
வழமைபோல
உன் புன்னகையால் துடைத்தெறிந்து
பார்வையில் மடிசாய்த்து
பிரியத்தால் தலைகோதுவாய் என்ற
நம்பிக்கை இற்றுப்போய்விடவில்லை என்னுள் இன்னமும்.

உன் வருகை நிகழும் அக்கணம்
என் இறுதிமூச்சு வெளியேறும் தருணமாயிருக்கக்கூடும்.
உனக்கான என் வார்த்தைகள்
ஒலியிழந்து போயிருக்கலாம்.
என் விழிப்படலத்தில் ஒளியின் ரேகைகள் அழிந்திருக்கலாம்.
செவித்திறனும் மங்கி
நடை மறந்த பாதங்களும்
தொடு உணர்ச்சியிழந்த தோலுமாய்
உயிர்த்திருந்த கணங்களில்
அன்றொரு நாள்
என் உள்ளங்கையில் நீ உருட்டித் தந்த
உயிரில் கலந்துவிட்ட
அவ்வொரு கவளம் சோற்றின் வாசனையில்
சாத்தியப்பட்டது என் காத்திருத்தல்.

Wednesday, 5 June 2019

சொல்லொன்று சிரிக்கிறது
சொல்லொன்று குளிர்கிறது
சொல்லொன்று மலர்கிறது
சொல்லொன்று உயிர்க்கிறது
உன் பெயராகும் போது ❤️

Saturday, 11 May 2019

நேர்த்தியான வட்ட அலைகளை வரைகிறது
குழப்பத்தில் குளத்தில் எறிந்த கல்

Wednesday, 8 May 2019

அரவமேதுமற்றுச் செல்லும் அரவமென
விடியலை நோக்கி
ஊர்ந்து செல்கிறது இவ்விரவு

பேசிக் தீர்க்கப்
பொழுதுகள் கிடைக்காத காதல்
காணும்போதில் முரண்களிலும்
காணாப்பொழுதில்
பெருந்தேடலிலும்
வளர்கிறது 💜

Tuesday, 7 May 2019

பகலெங்கும் ஒளிந்திருந்து
இரவில் ஒலிக்கும்
இக்கூகையின் மொழிக்கு
மொழிதொலைத்த பெண்ணொருத்தி
சுமந்தலையும்
மௌனத்தின் சாயல்.