இறுக்கமான பொழுதுகளில்
எனக்குள் எளிதில் நுழைந்துவிடும் லாவகம்
இதுவரை கைவரப்பெறவில்லை உன்னையன்றி மற்றவர்க்கு.
ஏதேதோ புலம்பித் திரியும் மனதுக்கு
புன்னகையால் ஒரு கடிவாளம் போடுகிறாய்.
தனிமை தேடி அமரும்வேளை
ஓயாத உன் பேச்சுக்களால் திசைதிருப்பும் உன் வன்முறை
மன்னிக்கத்தக்கதல்ல.
பசி மரத்துப்போனவேளையில்
பார்வையில் எனை உயிர்ப்பித்துப் பரிமாறும் உன் அன்பைப் புறக்கணிக்கும்
என் சினத்தையும் சேர்த்தே செரிக்கிறாய் நீ.
எத்தொலைவு போனாலென்ன
அருகில் உன் ஆரவார அன்பின் மழை பெய்துகொண்டே இருக்குமென்ற நம்பிக்கையில்
உன்னை உதறிச்செல்லவும் எத்தனிக்கும் என் பிடிவாதம்
உன் ஒருதுளி மௌனத்தில் தளர்ந்துபோகிறது.
எதுவாயினும்
எப்பொழுதாயினும்
எதற்காகவேனும்
உன்னோடு பொழுதைக் கழிக்கவியலா ஆற்றாமையில்
வெந்து தவிக்கும் இதயத்தின்
வெற்றுக் கூச்சலை
வழமைபோல
உன் புன்னகையால் துடைத்தெறிந்து
பார்வையில் மடிசாய்த்து
பிரியத்தால் தலைகோதுவாய் என்ற
நம்பிக்கை இற்றுப்போய்விடவில்லை என்னுள் இன்னமும்.
Monday 29 July 2019
Subscribe to:
Post Comments (Atom)
arumai
ReplyDelete