Sunday, 14 April 2019

எழுதலாமென்று எண்ணியவேளை
எழுதுகோலைப் பறித்துச் சென்றான் சாத்தான்.
கடவுளிடம் முறையிடச் சென்றேன்
அவனோ வார்த்தைகளைப் பறித்துக்கொண்டான்.

Friday, 12 April 2019

கருவறைக் கதவு பூட்டப்பட்டபின்
தெய்வம் இளைப்பாற நினைத்தது
நாளெல்லாம் நின்றபடி
காட்சி தந்த அசதியில்.
மீண்டும் காலை பூட்டுத் திறக்கும்வரை
ஆயாசமாய்ச் சுவரில் சாயந்து கால்நீட்ட
எத்தனித்ததொரு கணத்தில்
பாரத்மாதாகி ஜே என்ற முழக்கம் செவியில் அறைந்தது.
நாக்கைத் துருத்தி
நான்கு கைகள் அணிந்து
எழுந்து நின்ற தெய்வம்
பதறித் துடித்தபடி
கலைந்த உடையைத் திருத்திக்
கல்லுடல் முழுதாய் மூடி
காட்சிதரத் துவங்கியது

Thursday, 28 March 2019

என் விழி அசத்திய சிறுதுயிலென
நிகழ்ந்தது உன் வரவு 🖤

Monday, 25 March 2019

நீ வந்து தேடும் ஏதோவோர் பொழுதொன்றில்
நானிருக்கப்போவதில்லை என்பதைச் சொல்வதற்காகவேனும் உயிர் வாழ்ந்தாக வேண்டும் இன்று.

Monday, 11 March 2019

கடல் பார்க்க வந்த என்னைப்
பார்க்க வந்ததோர் பேரலை.

Monday, 11 February 2019

பசி குடைகிறது
நொடியொன்றைச் சுவைத்துப் பார்க்கிறேன்
நிமிடத்தைத் தின்று தீர்க்கிறேன்
மணிநேரங்கள் உண்டு முடிக்கிறேன்
மாதங்கள்
ஆண்டுகளென
விழுங்கியும்
ஆறாப் பசியடங்க
காலப் பெட்டகத்தைக்
கைக்கொள்ளத் தேடுகின்றேன்

Friday, 8 February 2019

ஏதுமற்றிருக்கிறேன் நான்.
என் கண்ணீராய்
என் புன்னகையாய்
என் வாய்மொழியாய்
என் மௌனமாய்
யாதுமாகி நிற்கிறாய் நீ.