Saturday, 23 August 2025

மண்கிளர்த்தி துளிர்த்தது அந்தச்செடி
மொத்தம் மூணு இலைவிட்டு.
தளிரின் மென்மை தூண்டியதாய்
சற்றே தீண்டிப்பார்த்தது அரவமொன்று.
வளர்ந்து செழித்தது செடி
மொட்டுகள் தூண்டியதாய் 
முகர்ந்து தீண்டியது அரவமொன்று.
பூத்துக்குலுங்கி புன்னகை செய்தது.
வண்ணங்கள் தூண்டியதாய்
வலிந்து தீண்டியது அரவமொன்று.
காய்த்துக் கனிந்த தருவாய் 
நின்றது.
செழுமை தூண்டியதாய்
சிறிதே உரசித் தீண்டியது அரவமொன்று.
ஆணிவேரூன்றி
அடர்ந்து கிளைத்துப் படர்ந்து நின்றது விருட்சமாய்.
நிழலின் இதத்தில் 
வாகாய்த் தங்கி
வசதியாய்த் தீண்டியது அரவமொன்று.
அரவங்கள் தீண்டுந்தோறும்
அரவமெழுப்ப வழியற்று அமைதிகாத்த விருட்சத்தை
ஆதித்தரு என்றே போற்றி
ஆலயம் எழுப்பிட்டார்.
அங்கே 
அர்ச்சனை செய்யவும்
அரவமொன்று வந்தது.

24.08.2016

No comments:

Post a Comment