Tuesday 29 August 2017

மாதவிடாய்...

ஆசிரியரின் தவறான அணுகுமுறை என்பதுதான் காரணமா?

எத்தனை பெண்களுக்கு இதுபற்றிய தெளிவான பார்வை, அணுகுமுறை இருக்கிறது? குடும்பத்தில் உயர்கல்வி படித்த பெண்கள், அதிகாரியாக பணியாற்றுபவர்கள், பணிநிமித்தம் பல இடங்களுக்கும் செல்ல வேண்டிய பெண்கள், மருத்துவப்பணியில் இருக்கும் பெண்கள் எனப் பலதரப்பட்ட  பெண்களுக்கும் மாதவிடாய் என்பது உடற்கழிவுதான் என்பதும் அதைத்தாண்டி அதில் மூடிமறைக்கவோ, வெளியில் கறை தெரிந்துவிட்டால் அவமானப்படவோ ஏதுமில்லை என்ற புரிதலும் இல்லை என்பதுதான் இங்கு சொல்லவந்தது.

இன்றும்கூட, மாதத்தில் மூன்று நாட்கள் ஓய்வு  என்பதைத்தாண்டி வேறெதையும் தொடக்கூடாது, குடும்ப ஆன்மீக நிகழ்ச்சிகளில் பங்குபெறக்கூடாது, இறந்துவிட்டவர்களின் சடலத்தைத் தொடுவதோ, நீரூற்றுவது போன்ற சடங்குகள் செய்வதோ கூடாது போன்ற கட்டுப்பாடுகள் 90% குடும்பங்களில் நிலவுகிறது.

குடும்பப் பாரம்பர்யத்தையும், உயர்வையும் புனிதத்தன்மையையும் கட்டிக்காப்பதற்காக படித்த விவரமறிந்த பெண்களும் இதைக் கடைப்பிடிக்கவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளாகிறார்கள். சிலர் அத்தகைய கட்டுப்பாட்டை குலப்பெருமை, புனிதம் என விரும்பியே ஏற்கிறார்கள்.

ஒரு பள்ளிமாணவியின் மரணமும், ஆசிரியரின் நடவடிக்கையும் தாண்டி உளவியல் பூர்வமாக அணுகவேண்டிய விஷயமிது. அந்த ஆசிரியருக்கும் இதுபற்றிய புரிதல் இல்லாமலிருந்திருக்கலாம்.

அணுகுமுறையில் கனிவாக இருந்திருக்கவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் ஒரு பெண்ணாக அந்த ஆசிரியரையும் உளவியல் ரீதியாக பயிற்றுவிக்கவேண்டும். இச்சமூகத்தில் அவரும் ஒரு குடும்பப்பெண்ணாக இருக்கிறார் என்பதைக் கருத்தில்கொள்ள வேண்டும்.

இதற்கான தீர்வு என்ன என்று சிந்திக்கும்போது, பெண் குழந்தைகளுக்கு பத்து, பதினோரு வயதிலிருந்தே உடற்கூறு, வளரும்போது உடலமைப்பில் ஏற்படக்கூடிய மாற்றங்கள், பருவமடைவது, மாதவிடாய், அது நிகழுவதற்கான காரணம். நிகழவேண்டிய அவசியம் ஆகியவற்றைப் பள்ளியில் பயிற்றுவித்தலும்,
ஆசிரியர்களுக்கும் அதுபற்றிய முழுமையான புரிதலும், தாயன்போடும், உளவியல் மற்றும் மருத்துவரீதியாக அந்நாட்களில் பெண்குழந்தைகளை அணுகவும் பயிற்றுவிக்கவேண்டும் என்றே நினைக்கிறேன். இது வெளியில் தெரிவது அவமானகரமான விஷயமல்ல என்ற ஏற்புத்தன்மையும் கொள்ள பெண்குழந்தைகளைத் தயார்செய்தல் இன்றியமையாதது.

இனியாவது இதுபோன்ற துயர நிகழ்வுகள் நிகழாமலிருக்க அரசு தரப்பும், பெண்கள் அமைப்புகளும், பள்ளி நிர்வாகங்களும் விழித்துக்கொள்ளவேண்டும்.
விரைந்து செயல்படவேண்டும்.

Thursday 17 August 2017

ஒரு பெண்ணின் கருமுட்டையும் ஆணின் வீரியமான விந்தணுவும் இணைந்த - அது இயல்பாய் நிகழ்ந்ததோ, ஒருவரின் விருப்பத்தினால் மட்டுமோ, பாலியல் வல்லுறவினாலோ, இருமனமும் மூழ்கி முக்குளித்த காதலினாலோ -  ஒரு தருணத்தில் உருவான கருவினை பெண் சுமக்கும் காலம் கிட்டத்தட்ட 280 நாட்கள். 280 நாட்களுமே தவக்காலம்தான் பெண்ணுக்கு.

உணவுண்ணும்போதும், நடக்கும்போதும், உட்காரும்போதும், படுத்துறங்கும்போதும் நொடிப்பொழுதுகூட அகலாத நினைவுடன், அக்கறையுடன், கவனத்துடன், பேரன்புடன் இந்தத் தவக்காலத்தைக் கடக்கிறாள் பெண்.

பெற்றெடுத்தபின்னும் முதல் மூன்று மாதங்கள் கருவில் சுமந்ததைப்போன்ற உணர்வுடனே கையிலும் மடியிலும் ஏந்திக்கிடப்பவள் தானே பெண்?

இதெல்லாம் தெரியாதா எங்களுக்கு, இப்ப எதுக்கு புதுசா என்று கேட்கிறீர்கள்.

இந்த நாட்டில் கர்ப்பவதியாகும் பெண்கள் இனி குழந்தைப்பேறு காலத்தில் தாய்ப்பாலோடு, தேவைப்படும் ஆக்சிஜனையும் சுரக்கும் மார்பகங்களைப் பெற்றவளாய் இருப்பது மட்டுமே நலம் பயக்கும்.

பெற்றவர்களுக்கு மட்டுமேதான் குழந்தைகள் மீதான பொறுப்பு. அரசுக்கு இல்லை. மூளை வீங்கி பாதிக்கப்பட்டதோ, ஆக்சிஜன் பற்றாக்குறையோ, அரசு வழக்குகள், அறிக்கைகள், விசாரணைக் கமிஷன்களோடு தன் கடமையை முடித்துக்கொள்ளலாம்.

இறந்த குழந்தைகளின் உயிர் மட்டும்தானா இழப்பு? சுமந்துநின்ற அந்தத் தவக்காலங்களை எதைக்கொண்டு நிறைப்பது?

60 குழந்தைகள், 60 தாய்மார்கள், 60 பேர் சுமந்துநின்ற 280 நாட்களின் இழப்பை, அந்நாளில் நெஞ்சில் ஏந்திய அன்பு, ஆசை, ஏக்கம், எதிர்பார்ப்பு, கனவு எல்லாவற்றையும் எதைக்கொண்டு சமன் செய்வீர்கள்? எந்த நஷ்டத்துக்கு எது ஈடாகும்?

பச்சிளங்குழந்தைகளின் தொடர் உயிரிழப்புக்குத் தார்மீகப் பொறுப்பேற்கும் அறவுணர்வு,  சம்பந்தப்பட்ட அமைச்சகத்துக்கும், மாநில, மைய அரசுகளுக்கும் இல்லை.

நமக்கு நாமே எல்லாவற்றுக்கும் பொறுப்பேற்றுக்கொண்டு ஜி.எஸ்.டி முதலான வரிகளை பொறுப்பாக செலுத்திக்கொண்டு, அறிவிக்கப்படாத அவசர நிலையில் வாழ்வதற்கு நம்மை தயார்படுத்திக்கொள்வோம்.

வாருங்கள்..
ஜென்மாஷ்டமியில் கோகுலகிருஷ்ணனின் பாதம் வரைந்து வரவேற்கத் திரளுவோம்.

14/08/17

ஆக்சிஜன் பற்றாக்குறையை பிறிதொரு நாளில் சாவகாசமாக  விவாதித்துக்கொள்ளலாம்.

Tuesday 8 August 2017

அலைந்து திரிகிறது பெருங்காற்று
வனமதைக் காணாமல்.

Monday 7 August 2017

எனது மௌனத்துக்கு மிக அருகில்
அடர்த்தியான சொல்லொன்று அமர்ந்திருக்கிறது.

பொறுப்பற்றுக் கிளம்பிவிட்ட புத்தன்
ஒரு கோப்பைத் தேநீருக்காக அலைகிறான்.
சாத்தானோ சுடச்சுடத் தயாரித்து
புத்தனோடு பகிர்ந்து மகிழ்கிறான்.
போதனைகள் பசிக்குதவா.

புள்ளியெனத் தேய்ந்து
சுவடற்றுப் போகவும்
வனாந்திரத்தில் கரைந்து போகவும்
விரிந்து பரந்த விசும்பினால் இயலுவதில்லை.

உன்..

சில்லென்ற மழையும்
தலைகோதும் தென்றலும்
சிலிர்க்கவைக்கும் சாரலும்
மட்டுமல்ல.
சுள்ளென்று சுட்டெரிக்கும் வெயிலும்..
உன் நினைவுகள்.

Sunday 6 August 2017

அக்கினிக்குஞ்சு என்றானபின்
சிறகுகள் சிதைத்தாலும்
கனல் கனன்றுகொண்டுதானே இருக்கும்!

Wednesday 2 August 2017

தண்மை

நீண்டு செல்லும் சாலையில்
வெயிலின் உக்கிரத்தைக்
குறைக்கின்றன
பிணைத்திருக்கும் விரல்கள்.

Friday 28 July 2017

பசித் தீ

பொழுது கடந்துகொண்டிருக்கிறது. கடந்துவிட்ட பொழுதுக்குள்
ஆகவேண்டிய செயல்கள்
நடந்தேறவில்லை.
ஆனால்
உடம்புக்குள் இயக்கம் நடைபெற்றுக்கொண்டேயிருப்பதற்கான
அறிகுறிகள் எச்சரிக்கின்றன.
கண்கள் சோர்ந்து
கால்கள் வலுவிழந்து
ஓய்வு தேவை என்ற எச்சரிக்கைக்கொடி ஏற்றுகிறது உடல்.
கவனம் சிதறுகிறது.
வயிற்றில் நினைவில் பசிகிளற
மெல்ல எழுந்து
எரியும் அடுப்பின் முன் வந்து நிற்கிறேன்.
கொழுந்துவிட்டெறிகிறது தீ.
விரல் கொண்டு கிளறி வெளித்தள்ளுகிறேன் கங்குகளை.
ஆரஞ்சுநிறத்தில் ஜொலிக்கின்றன நெருப்புத் துண்டங்கள்.
ஒன்று
இரண்டு
மூன்று
.
.
.
மென்று தின்று விழுங்குகிறேன்
கனன்ற நெருப்புத்துண்டுகளை.
ஆழ்பசி தீர விட்ட இடத்திலிருந்து
தொடங்குகிறேன் வேகமாய்.

Thursday 27 July 2017

வெல்லும் துளிகள்

டிவிஎஸ் கடந்து பாலம் ஏறி உறையூர் நோக்கி வந்துகொண்டிருக்கிறேன். மிதமான வேகத்தை சற்று கூட்டுகிறேன் வெயிலின் சுள்ளென்ற வெப்பம் உறைக்க. இடதுபுறத்திலிருந்து ஒரு சைக்கிள் ஓட்டும் சிறுவன் வியர்க்க விறுவிறுக்க மிதிக்கிறான். நான் வேகம் கூட்ட அவனும் இன்னும் கூடுதல் வேகம் கூட்டுவதுபோல் தெரிகிறது. இன்னும் கொஞ்சம் வேகமாக இயக்க அச்சிறுவனின் கால்கள் அதிக அழுத்தம் கொடுத்து சைக்கிளை மிதிப்பதை உணர்கிறேன். அதற்குமேல் மனசு வரவில்லை. அவன் உணராவண்ணம் வேகத்தைக்கூட்டாமல் நான் கொஞ்சம் கொஞ்சமாகக்குறைக்க, அவன் முன்னேறி மெல்ல திரும்பிப் பார்த்து என்னை முந்திவிட்டதை உணர்த்துகிறான் பெருமிதப் புன்னகையோடு.
சென்றுவா மகனே, செல்லும் பாதையெங்கம் வெற்றிகள் ஈட்டுவாய்.
உன் வியர்வைத்துளிகள் வெல்லும் எதையும்.

எது வாழ்க்கை 3

எதிர்பார்ப்பினால்தான் ஏமாற்றமா?
எதிர்பார்ப்பு தவறா?
எதிர்பார்ப்பு தவிர்க்கவேண்டிய ஒன்று எனில் எதுவுமே நடைபெற சாத்தியம் இல்லையே.

Monday 24 July 2017

எது வாழ்க்கை (2)

ஆசைதான் வாழ்க்கையா?
ஆசையற்றுப் போனால் வாழ்வின் சுவையகலுமா?

எது வாழ்க்கை (1)?

பிறக்கிறோம்
இறக்கிறோம்
இடைப்பட்ட அனுபவங்கள் தானே வாழ்க்கை?!

Sunday 23 July 2017

பேச்சிலருக்கு சில டிப்ஸ்

கொண்டைக்கடலை ஊறவைக்கும்போதே நன்றாகக் கழுவிவிட்டு நல்ல தண்ணீர்விட்டு ஊறவைக்கலாம். ஊறியபின் தண்ணீரை வடித்து புளி ஊறப்போட பயன்படுத்தலாம். கொண்டைக்கடலை வேகவைக்கும்போதே தேவையான உப்பு சேர்த்து ஒரு சிறுகரண்டி எண்ணெய் விட்டு வேகவைத்தால் வறண்டுபோகாமலிருக்கும். மீண்டும் வேகவைத்த நீரை வடித்து ரசம்வைக்கப் பயன்படுத்தலாம். சுவையும் சத்தும் நிறைந்தது.

Sunday 16 July 2017

உனது எனது எனப்
பிரித்தெடுக்க முடியாது வழிந்த நம் வியர்வையின் ஈரம்
உயிருறங்கும் வரை காய்வதில்லை.

Sunday 2 July 2017

ஸ்ஸ்ஸ்., யப்ப்பா..

அடுத்த தலைமுறை ஆண்குழந்தைகளை கொஞ்சமாவது மாற்றி வளர்க்கலாம் என்று பார்த்தால், வீட்டுக்குள்ளேயே இருக்கும் நம் தலைமுறை ஆண்களை வைத்துக்கொண்டு முடியாது போலிருக்கே.

Sunday 18 June 2017

பெண்...
குறில் தான்.
நெடில்களின்
நீண்ட நெடிய கனவுகளுக்கும்
ஆசைகளுக்கும்
அற்ப கவுரவத்திற்கும்
குனிந்து நிமிர்ந்து
'ங' போல் வளைந்து.

#On_this_day

Friday 16 June 2017

புத்தனின் அகிம்சையை வியந்து போற்றிக்கொண்டே
சாத்தானின் கட்சியில் இணைந்தோம் நாங்கள்.

தேவதைகள் சாத்தான்களை
கலப்புமணம் செய்துகொண்டன.
புத்தர்கள் பிறந்தனர்.

சாத்தானின் சிரிப்பில்
மெய்மறந்த கடவுள்
செல்பி எடுத்துக்கொண்டார்
சாத்தானுடன்.

Wednesday 14 June 2017

ஏதுமற்று

மௌனத்தின் பேரிரைச்சல் மனமெங்கும்.
ஏதுமற்றதன் கனம்
இயங்குதிறனைக் குறைக்கிறது.
யாருமற்ற தனிமையின் நெரிசல்
புழுக்கம் கூட்டுகிறது.
இதழுக்குள் சிறைப்பட்ட வார்த்தைகளின் உக்கிரம் எரிக்கிறது.
தேடியது எதுவென்றறியாமல்
இல்லை என்ற விடையைச்
சுமக்கவியலாமல் சுமந்து திரிகிறேன்
உண்டென்பது எதுவோ?
விழி காண்பதும்
செவி கேட்பதும்
மனம் உணர்ந்ததும் மாயையோ?

Friday 2 June 2017

மதில் மேல் பூனை

இக்கரையில் எக்குறையுமில்லையெனினும்
அக்கரையில் இருக்கும்
சிறுதுண்டுக் கருவாடுக்கென
எப்போதும் மதில்மேல் பூனையாய்
காத்திருக்கும் மனசு.

வேர் விடும் வேளை

ஒரு கோப்பை பார்வை
ஒரு கோப்பை காதல்
மௌனங்களை உறிஞ்சி
சுவைக்கிறோம் மெல்ல.
மிதமான சூடு
இதமான சுகம்
பற்றிப் பரவுகிறது இதயமெங்கும்.
இதுவரை பேசாத வார்த்தைகளைக்
கொட்டி வைத்திருந்த
கிண்ணமொன்று நிறைந்திருக்கிறது
இடையிடை கொரிக்க.
விரல்களால் வார்த்தையெடுத்து மெல்கிறேன்.
ருசியுணர்ந்து புன்னகைக்கிறாய்.
உன் புன்னகையை எடுத்து
கைப்பைக்குள் பத்திரப்படுத்துகிறேன்.
பை நிறைகிறது.
எழுந்து போக யத்தனிக்கிறாய் நீ்
என் பாதம் அணிந்து.
உன் கையசைத்து விடைபெறுகிறேன்.
வானமெங்கும் வியாபித்து நிற்கும் நம் காதலை
பூமியில் பயிரிடும் வேளை இது.

உன்னுடனான உரையாடல்கள்
ஒருபோதும் முற்றுப்பெற்றதில்லை.
வலிந்து முறித்துச் செல்கிறேன் பாதியில்.
மீதமிருப்பதைத் தொடரும்
சித்தமேதுமில்லை,
உன்னை
என்னை எண்ணிக்கொண்டிருக்க
வைப்பதையன்றி.

தேவையற்று நீண்டிருக்கும்
தாழ்ப்பாளின் முனை சொல்லிவிடும்
அவ்வறைக்குள் நிகழ்ந்திருக்கும்
ஒரு குழந்தையின் வருகையை.

கூடுகிழித்துக் கிளம்பும் ஒரு பட்டாம்பூச்சி
ஈரச் சிறகுகளைக் காற்றில் உலர்த்திப்
படபடத்துக் கிளம்பும்.
பூக்கள் அருகாமையா
வெகுதூரமா அறிவதில்லை.
தேனுறிஞ்சிச் சிறுவயிறு நிரப்பும்
பட்டாம்பூச்சியின் போராட்டம் அறியாது
வண்ணங்கள் பார்த்துச் சிலிர்த்துப் போகும் நாம்
தன் சிறகின் வனப்பறியா சிறுபூச்சியின்
பசி தீர்க்கும்
சிறுமலர்பூக்கும் செடியொன்றை
வளர்த்தல் நலம்.

வர்லாம் வர்லாம் வா...

செவியில் விழும் சலசலப்புகள்
ஆனந்த தாண்டவமாயிருக்கலாம்.
தூரத்தில் தெரியும் கூட்டம்
திருவிழாத் திரளாக வாய்ப்புண்டு.
கருமேகங்கள் மேலும் அடர்ந்தாலும்
வெள்ளாமைக்கான பெருமழையே.
இதயம் லேசாக்கி
மென்புன்னகை முகத்தில் தேக்கு.
எரிமலை நெருப்பில்
இரவுணவு சமைக்கலாம் வா.

வெற்றுக்கோப்பையில்
நீர் நிரப்பி அருந்தலாம்.
பசும்பால் நிரப்பிச் சுவைக்கலாம்.
ஆவி பறக்கும் தேநீரோடு
அளவளாவும் நட்பிருந்தால்
அழகான மாலைப்பொழுதை
அர்த்தமுள்ளதாக்கலாம்.
நஞ்சினை நிரப்பி
கசப்பினை அருந்தி
தேமதுரச் சுவையெனச் சிலாகித்து மகிழுவதேன் கவிஞர்களே?
இழப்பு உங்கள் உறவுகளுக்கு மட்டுமல்ல
கவியுலகுக்கும் தானே.

க.சீ.சிவகுமாரின் மறைவு தந்த வலியில்.

பெரிய மனுஷன்

Crocodile க்கு முத்தம் கொடுக்கும் டைனோசார்
பாலைவனப் பாம்பின் நச்சுமுத்தம் சுவைக்கும் அலிகேட்டர்.
ஷேடோ ஃபைட் -2வின் ஆயுதம் தாங்கி
அநீதி அழிக்கக் கிளம்பும் கதாநாயகன்.
இன்னும் மான்ஸ்டர்கள் வாழுதா
என்ற கேள்விக்கான விடைகாண
ரெப்டைல்ஸ் என கூகிள்பண்ணும் சிறுவன்.
இதுதான் அவன் உலகமென நாம் நினைக்க
சிறுபிள்ளை வெற்றிமாறனோ
வாழ்க்கைனா இன்பதுன்பம் கஸ்டம் நஸ்டம்
எல்லாம் உண்டு
அட்ஜஸ்ட் பண்ணிக்கணும் நாமதான்
என்று அண்ணனை ஆற்றுப்படுத்தி
தலையணை அணைத்து உறங்கச்செல்கிறான் நம் விழிகளை
நிறையச்செய்து.

இன்று உலகக் கவிதைகள் தினமாமே.
நாங்களும் களத்துல இறங்குவோம்ல.

சபையோர் அவையோரெல்லாம் இந்த ஒருநாள் பொறுத்து அருளுக.
--------------------------------------------------------

சுவரேறும் பல்லியென
ஆசைகள் மனமேறும்.
இலக்கைத் தவறவிட்ட பல்லியாய்
"சொத்" என கீழேவிழும் மனது
ஆசைகளறுந்து
துடித்துக் கிடக்கும்.
வாலறுந்த பல்லிக்குப் பின்னரும்
ஓர் இரை கிடைக்கலாம்.
அறுந்துபோன ஆசையோ
தூக்குக் கயிறென
இறுக்கத்
துடித்தடங்கும் மனசு.

------------------------------------------------------
அப்பாடா!
திருப்தியாச்சு மனசு.

ம்ம்ம்...

'ம்'   என்பது ஒரு துவக்கம்
மௌனம் கனக்கும்போது
'ம்'   என்பது ஒரு தொடர்ச்சி
மொழி தடைபடும்போது
'ம்'   என்பது ஒர் இணைப்பு
உரையாடல் அறுபடும்போது
'ம்'   என்பது ஒரு திருப்பம்
எத்திசை தொடர்வதென அறியாதபோது
'ம்'   என்பது ஒரு முடிவு
ஒத்திசைந்து ஏற்கும்போது
'ம்'   என்பது உயிர்ப்பு
பேச நா எழாமல் தத்தளிக்கும் போது
'ம்'   என்பது பெருமூச்சு
யாருமற்ற தனிமையில்
'ம்'   என்பது உயிரின் ஒலி
அன்பின் பரிமாற்றத்தை உணருகையில்.
ம்ம்ம்...

விரித்த குடைதரும் நிழலென நட்பு.

வனமாய் நீ.
பெருங்காற்றாய் நான்.

மனு இறக்கவில்லை.
அவன் கோரப்பசிக்கு சம்பூகன், ஏகலைவன் போதவில்லை.
ரோஹித் வெமுலா, முத்துக்கிருஷ்ணன் என காவுப்பட்டியல் நீளுகிறது.

14/03/2017

90

அன்று
உண்ணாவிரதப் போராட்டம் என்னும் அகிம்சையைக் கடைப்பிடித்த காந்தியை சுட்டுக்கொன்றோம்.

நேற்று
வாழ்நாளெல்லாம் நம் உயர்வுக்கெனத் தம்மை அர்ப்பணித்த பெரியாரை செருப்பால் அடிக்கும் செருக்கு கொண்டோம்.

இன்று
இரோம் ஷர்மிளாவை வாக்கு எண்ணிக்கையால் வீழ்த்தினோம்.

போராட்டங்கள் முடிவதுமில்லை.
போராளிகள் ஓய்வதுமில்லை.

வாக்காளர்கள் பணத்தை எண்ணிக்கொண்டிருக்க

வேட்பாளர்கள் வாக்குகளை எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.

தனக்கான ஆதரவை 1,2,3 என எண்ணிக்கொண்டே வந்து 90 க்கு மேல் எண்ண ஆளில்லாமல் முடிக்கிறது சனநாயகம்.

11/03/2017

Wednesday 31 May 2017

பெண்ணென்னும் குளிர்நெருப்பு

புவிக்கு ஆதாரம் அவளே.
பொறுமையில் பூமாதேவி
யெனச் சொல்லிப் பொத்திவைத்தார்.
சிறுதுளை வெளிச்சம் போதுமவளுக்கு.
சீறிப்பாய்ந்திடும் திறன்கொண்டவள்தான்.
பெரியாரும்
காந்தியும்
பாரதியும்
பாவேந்தனும்
விரல்பிடித்து அழைத்து வந்தனர் அவளை.
நாகம்மை
மணியம்மை
மணலூர் மணியம்மா
ராமாமிருதம் அம்மை
லீலாவதியாய்
போராட்டங்கள் வென்று காலூன்றினாள்.
அம்பையாய்
இளம்பிறையாய்
இலக்கியம் பூண்டாள்.
வர்த்தினியாய் அன்பை விதைக்கிறாள்.
கலையாய்
அவர்களின் அடியொற்றி
முன்செல்ல விழைகிறாள்.
யாதுமவளே.
ஞாலத்தில் இனி அவளைப்
பூட்டிவைப்பவர் இல்லை எவரும்.
அன்பெனும் கண்கொண்டு
அகிலம் நோக்கும் அவளோடு
கரம்கோருங்கள்.
கனவுகளில் மட்டுமே
சிரிக்கும் அவளை சேர்த்தணைத்து
சகமனிதியாய் தோள்கொடுங்கள்.
வானம் வசப்படும்
அவளுக்கும்
அனைவருக்கும்.
ஏனெனில்
பெண்ணின்றி அமையாது இவ்வுலகு.
------------------------------------------------------

சர்வதேச மகளிர்தின புரட்சிகர நல்வாழ்த்துகள்,
என்னொத்த மகளிர்க்கும்
தோள்கொடுக்கும் அன்புநிறைத் தோழர்கட்கும்.

08/03/2017
------------------------------------------------------

அவளும் நானும்

இன்முகம்
புன்சிரிப்பு
மென்பார்வை
பூந்தென்றல்
குளிர்சாரல்
வர்த்தினியும் நானுமாய்
பொன்மாலைப்பொழுது

Varthini Parvatha
07/03/2017

Monday 29 May 2017

இருக்கிறோம் உயிரோடு...
வாழ்கிறோமா?

நானும் உன்னை.

தேர்வு அறையில் நான்.
தலைப்பென்னவோ
"நான் உன்னைக் காதலிக்கிறேன்"

தேர்வில் வெற்றியா தோல்வியா
எதுவென்பதில் அய்யமில்லை.
காதலில் வெற்றியா தோல்வியா
என்ற அச்சமுண்டு.

அழகான கையெழுத்து
கவித்துவ சொல்லாடல்
கொண்டு வென்று
வெற்றிக்கோப்பையை ஏந்தி வருகிறேன்
தோல்வியை எதிர்கொள்ளும் திராணியின்றி.

சொல்லவா நான்?
சொல்வாயா நீ?

என் நெஞ்சு துடிக்க
விழிகள் படபடக்க
கரங்கள் நடுங்க
கால்கள் துவள
வந்தடைகிறேன் உன்னை.

நெஞ்சாங்கூட்டில் உயிர்பிழைக்க
அந்த மருந்தென்னும் சொல்லைச் சொல்லிவிடு.
"நானும் உன்னை"

Thursday 25 May 2017

21/12/2017

அடிபட்ட இடத்தில்
PAIN இருக்கா என்று கேட்டார்கள்.
இன்னும் கூடுதலாய் வலி.

#உலகத்_தாய்மொழி_தினம்_இன்று

18/02/17

எங்கள் காப்பீட்டு ஊழியர் சங்கத்தின் ஈடு இணையற்ற தோழரும், தொழிற்சங்க வழிகாட்டியுமான தோழர். R.G. என்று அழைக்கப்படும்
தோழர். R.GOVINDARAJAN அவர்கள் மறைவுக்கு செவ்வஞ்சலி.

தோழர்.ஆர்.ஜி. அவர்களை சந்திக்கும்போதெல்லாம் ஒரு அன்புநிறைத் தோழராகவே உணர்ந்திருக்கிறேன். வயதில் சிறியவர்கள் தானே என்ற எண்ணமேதுமின்றி என் போன்றோரை வாங்க தோழர் என உபசரிக்கும் அவரது அன்பையும், மதித்து உரையாடும் பாங்கினையும் நம் அய்யங்களைத் தீர்க்கும் அக்கறையினையும் வியந்து நோக்கியுள்ளேன்.

ஒரு மாலையில் திருச்சி தொடர்வண்டி சந்திப்பில் அவரோடு உரையாடிய அனுபவம் மறக்கவியலாது. காணும்போதெல்லாம் தம் அனுபவஅறிவால் நம்மில் ஒன்றை நிறைத்துவிடும் கனிவு அவரிடமிருந்தது.

தொழிற்சங்கம் பற்றிய தெளிவான புரிதலை என்னுள் உருவாக்கிய தோழர். ஆர்.ஜி. அவர்களின் மறைவு ஒரு பேரிழப்பாகவே உணர்கிறேன்.

AIIEA விற்கும் அன்னாரின் மறைவு ஈடுசெய்யவியலாத ஒன்றே.

தோழருக்கு செவ்வணக்கங்கள்.

குமாரசாமிக்கு ஒரு குட்டு கூடக் கிடையாதா?
வாய்ப்பாடையாவது imposition எழுதச் சொல்லுங்க..

15/02/17


உன் முத்தத்துக்கும்
என் முத்தத்துக்குமிடையே
காது தூரம்தான்
முகத்தைத் திருப்பு என் பக்கம்.

நமக்கான தனிமையில் நிகழும் 
உரையாடலினூடே
உனது
முதல் "ம்"ல் மரித்துப்போகிற உயிர்
நீ தரும் 
முதல் "இச் " ல்
உயிர்த்தெழுகிறது.

Tuesday 23 May 2017

மூன்று வயதுப் பிஞ்சு, 

ஏழு வயதுக் குருத்து, 

பதின்வயதுப் பாவையர், மூத்தகுடிப் பெண்மணிகள்... 

எவரையும் விட்டுவைக்க மனதில்லை உங்கள் காமத்திற்கு... எனில் தீர்வு ஒன்றையொன்று தான் சகோதரர்களே. 

#இனி_பெண்_என்றோரினம்_பிறப்பற்றுப்_போவதுதான்_ஒரு_நூற்றாண்டுக்காவது

ஆமைபோல் ஒடுங்கு

உள்ளே இரு

பத்திரமாய் இரு

கவனமாயிரு

எச்சரிக்கையாய் இரு

எட்டிப்பார்க்காதே

முகம் காட்டாதே

சிரித்து சிலிர்க்காதே

உரத்துப் பேசாதே

கோபம் கொள்ளாதே

குரலுயர்த்தாதே

அடங்கிக்கிட

சுண்டுவிரல் தெரிய உடையணியாதே

இழுத்து மூடு உடலை...

இளமை ததும்பும் பருவப்பெண்ணுக்குச் சொல்லவில்லை இதெல்லாம்...

பால்குடிக்கும் பச்சிளம் பெண்சிசுக்களுக்கே சொல்கிறேன் இன்று.

பேராண்மைகளுக்கு ஒரு செய்தி

பெண்ணெனப்

பிறந்துவிட்டோம் என்பதாலேயே

பிய்த்தெறிகிறீர்கள் சிறகுகளை.

அணிந்திருக்கும் ஆடைகளை

அவிழ்த்தெறிந்த உங்கள் அராஜகம்

குழந்தையென்றும் பாராமல் 

குருதி சுவைக்கிறது.

இளித்தபடி நெருங்கும் உங்கள்  வாயோரங்களில்

நீண்டிருக்கும் பற்களில்

சிக்கிக் கொண்டிருக்கும் சதைத் துண்டுகளில்

உங்கள் தாயின் வாசனை

நுகர மறந்தீரோ?

அண்ணாவென்றோ

மாமாவென்றோ

அன்போடழைத்த மழலையின்

அடிவயிறு தடவும் உங்கள் பேராண்மை

குறித்து

சிலாகித்து சிரித்திடுங்கள் உங்களுக்குள்ளாகவே.

சிதைக்கப்படும் பெண்ணினம் 

பிறப்பின்றிப் போகட்டும் இனியும்.

உங்கள் இச்சைக்குப் பெண்ணுரு தேடி

காடுகளில் திரிந்தலையத் தயாராகுங்கள்

பேராண்மைகளே.

வெங்காயம்
வெள்ளைப்பூண்டு
தக்காளி
கத்தரிக்கா...

போன்றவற்றை வெட்டுவதற்கு மட்டுமே
பெண்கள்
இதுவரை கையிலெடுத்த கத்தியின்
உச்சபட்ச பயன்பாட்டினை
உலகிற்குப் பறைசாற்றினாள்
என் தோழியொருத்தி.

Monday 15 May 2017

சமர்

நிராயுதபாணியாய்தானே
நிற்கிறேன்.
ஆயுதங்கள் தரித்து வென்றதாய் குற்றஞ்சாட்டுகிறாய் நீ.

Sunday 14 May 2017

நேசத்தின் வாசம்

விரல் கோர்த்த நேசம்
விடைபெற்றுப் போனபின்னும்
விரலிடுக்கில் நேசத்தின் வாசம்.

தீண்டாய்...

பற்றியெரியும் பரபரப்புகளினூடே
ஆறுதலாய்..
தீண்டும் உன் விரல்களின் முத்தம்.

கோப்பைத் தேனீர் ஆறட்டுமே,
சுடச்சுட பார்வைகளைப் பரிமாறிக்கொள்வோம்.

வெற்றிடம் நிரப்புமாம் காற்று.
நீ என்னை நிறைத்தபின்தான்
புரிந்தது.

நடந்து செல்லும் பாதையில்
இடறும் சிறுகல்லகற்றக் குனிந்து நோக்குங்கால்
உன் விழியெனத் தெரிய
வலி மறந்தேனடா.

விழித்திருக்கும் பொழுதில்
நினைவுகளால் நிறைக்கிறாய்.
பிரிந்திருக்கும் கணங்களில்
துயரங்களால் நனைக்கிறாய்.
சேர்ந்திருக்கும் பொழுதினை
மௌனங்களால் கரைக்கிறாய்.
இமைசேர விடாமல் இரவுகளில்
கனவுகளால் துளைக்கிறாய்
நினைத்திருக்கும் பொழுதுகளில்...
நானாகவே இருக்கிறாய்.