Friday 19 April 2019

பொங்கி வரும் காட்டாறென
நுரைத்துப் பொங்கி
ஆர்ப்பரித்துக்
கரைபுரண்டோடுது
வெள்ளை வெயில்நதி

Sunday 14 April 2019

ஆதியிலிருந்து இன்று வரை
ஆரியத்திடம் அதே உத்தி
மண்ணின் மாந்தரைத் துரத்தியடிக்க
அவர்கள் சொன்னார்கள
நாம் குரங்கானோம்
அவர்கள் சொன்னார்கள்
நாம் அரக்கர்களானோம்
அவர்களின்
மேனி நிறத்தில்
நாத் திறத்தில் மயங்கி
நம் சோதரியின் மூக்கறுத்தவனுக்காய்
விபீடணர்களானோம்.
இன்று ஆசிஃபா வரை
ஆதிகுடிகளை விரட்டியடிக்க
அவர்கள் சொல்வதைச் செய்கிறோம்
ஒவ்வொன்றாய்ச் செய்தபின்
அவர்கள் சொல்கிறார்கள்
எது நடந்ததோ
அது நன்றாகவே நடந்தது

#மீள்

எழுதலாமென்று எண்ணியவேளை
எழுதுகோலைப் பறித்துச் சென்றான் சாத்தான்.
கடவுளிடம் முறையிடச் சென்றேன்
அவனோ வார்த்தைகளைப் பறித்துக்கொண்டான்.

Friday 12 April 2019

கருவறைக் கதவு பூட்டப்பட்டபின்
தெய்வம் இளைப்பாற நினைத்தது
நாளெல்லாம் நின்றபடி
காட்சி தந்த அசதியில்.
மீண்டும் காலை பூட்டுத் திறக்கும்வரை
ஆயாசமாய்ச் சுவரில் சாயந்து கால்நீட்ட
எத்தனித்ததொரு கணத்தில்
பாரத்மாதாகி ஜே என்ற முழக்கம் செவியில் அறைந்தது.
நாக்கைத் துருத்தி
நான்கு கைகள் அணிந்து
எழுந்து நின்ற தெய்வம்
பதறித் துடித்தபடி
கலைந்த உடையைத் திருத்திக்
கல்லுடல் முழுதாய் மூடி
காட்சிதரத் துவங்கியது