Thursday 1 August 2019

பசித் தீ


பொழுது கடந்துகொண்டிருக்கிறது. கடந்துவிட்ட பொழுதுக்குள்
ஆகவேண்டிய செயல்கள்
நடந்தேறவில்லை.
உடம்புக்குள் இயக்கம் நடைபெற்றுக்கொண்டேயிருப்பதற்கான
அறிகுறிகள் எச்சரிக்கின்றன.
கண்கள் சோர்ந்து
கால்கள் வலுவிழந்து
ஓய்வு தேவை என்ற எச்சரிக்கைக்கொடி ஏற்றுகிறது உடல்.
கவனம் சிதறுகிறது.
வயிற்றில் நினைவில் பசிகிளற
மெல்ல எழுந்து
எரியும் அடுப்பின் முன் வந்து நிற்கிறேன்.
கொழுந்துவிட்டெறிகிறது தீ.
விரல் கொண்டு கிளறி வெளித்தள்ளுகிறேன் கங்குகளை.
ஆரஞ்சுநிறத்தில் ஜொலிக்கின்றன நெருப்புத் துண்டங்கள்.
ஒன்று
இரண்டு
மூன்று
.
.
.
மென்று தின்று விழுங்குகிறேன்
கனன்ற நெருப்புத்துண்டுகளை.
ஆழ்பசி தீர விட்ட இடத்திலிருந்து
தொடங்குகிறேன் வேகமாய்.

பார்த்து நாளாச்சே
என்ற உன் வார்த்தைகள் தான் இன்றைய சந்திப்புக்கு அச்சாரம்.
அருகருகே அமர்ந்திருந்த தருணங்களில்
பயிற்சி மகளிரை வியந்தாய்
பணியாளரை விசாரித்தாய்
அன்பைப்பொழிந்தாய் அயல்மாநிலத்தவனிடம்.
உண்டுமுடித்துக் கிளம்புகையில்
அய்ம்பது ரூபாய் கொடுத்து
அப்பப்போ வருவேன் என அரவணைத்தாய் அவனை.
அசாம்காரனின் தமிழில் தொலைந்து
விடைபெற்ற வினாடி வரை நீ
என் முகம் பார்த்த நினைவில்லை.
ஆளுக்கொரு திசையில் பயணம் தொடர்கையில்
அலைபேசியில் சொன்னாய்
'நீ இன்று கூடுதல் அழகு' என்று.
வார்த்தைகளில் தொலையும் மனசில்
வாழுகிறது அன்பு குறையேதுமின்றி.