Monday 28 January 2019

எதிரெதிர் அமர்ந்திருக்கும்
வார்த்தைகளற்ற நம்மிடையே
ஓயாமல் ஒலித்துக்கொண்டிருக்கிறது மௌனத்தின் பேரிரைச்சல் 🖤

Sunday 27 January 2019

நினைவுகள் கொன்றது என்னை.
அதற்கு சற்றுமுன்வரை
தீராப்பசி தீர
நினைவுகளை மென்று
தின்று கொண்டிருந்தேன்.
விக்கித்தபோது கண்ணீர் அருந்திக் கடந்தேன்
தீரா தாகத்தை உமிழ்நீர் கொண்டு தணித்தேன்
கொஞ்சம் புரைக்கேறி தடுமாறும் பொழுது
கடந்த கொடும்பொழுதுகளைக் கொண்டு தட்டிக் களைந்தேன்
ஊன் செத்த பொழுதொன்றில்
குருதியின் சூட்டில்
உயிர் தப்பிக் கிடந்தபோது
கனவுகள் கடைந்து
நினைவுகளை உயிர்ப்பித்து
உண்டு
தின்று
செரித்த பொழுதொன்றில்
நெரிபடும் குரல்வளை திமிற விழித்துப் பார்க்க
நினைவுகள் கொன்றது என்னை.

நத்தையென ஊர்ந்து நகர்கிறது இரவின் தனிமை
நினைவென்னும் எச்சிலால் உயிர் நனைத்தவாறே.

Saturday 26 January 2019

ஆந்தைகள் அலறும் இந்நிசியில்
அணங்கொருத்தியின் அழுகுரல்
இணைந்து ஒலிக்கிறது
கூகைக்குக் கிடைத்திடுமோர் இகல்பொழுது
பகல் பார்த்து வெல்லும் காக்கையின் தந்திரமும் அறிந்தாளில்லை.
காலிலோ
கழுத்திலோ
சிறுகயிற்றுக்கு அஞ்சிய பிடிதானே இவளும்
இவளொத்த பலரும்.

Thursday 17 January 2019

என் விழிவீச்சின் எல்லையில்
நிற்கும் நீ
வழிந்தோடும் விழிநீரில்
கரைந்து விடாமலிரு 🖤

Sunday 13 January 2019

அன்பென்று சொல்லி
திரைகளிடுகிறாய்
பார்வையால் கோடுகள் கிழிக்கிறாய்
வார்த்தைகளில் எல்லை வரையறுக்கிறாய்
திரைகள் விலக்கி நான் வெளிச்சம் பார்க்க
சுட்டெரிக்கும் உன் பார்வையால்
விழிநீர் கோர்க்கிறது
கோடுகள் தாண்டுகையில்
உன் வார்த்தைகளின் வன்மத்தில்
குருதி வழிகிறது விழிகளில்
நீ வரையறுத்த எல்லைகள் மீறும்போது
உன் அதிகார வரம்பின் வன்முறைத் தாண்டவங்கள் அரங்கேறும்வேளை
வழிந்த குருதி உறைந்து
கனலென மாறிப் பொசுக்கவும்கூடும்
ஆணென்ற உன் ஆணவத்தை.