Thursday 18 October 2018

வலி...

உணர்வுகள் அழுத்த உறைந்திருக்கிறேன்.
முன்னதாக
ஒரு சோகம் எனைக் கவ்வியது.
மெல்ல மெல்ல உள்நுழைந்து
உயிரைத் தொட்டது.
தொடுதலின் முதல் கணத்தில்
மென்வலியொன்று ஊடுருவ
தரை சிந்திய நீர் விரவுதல் போல
மனமெங்கும் வியாபித்து
அடுத்தடுத்த கணங்களில்
பெருவலியாய் உருமாறி
உயிரெங்கும் நிறைந்து வழிய..
வலியைப் பருகிச் சுவைக்கின்றேன்.
சுவைத்துப் பருகுகின்றேன்.
தீராவலியொன்றைம் தேடத் துவங்குகிறேன்.
எங்கெங்கு வலியுளதோ
அங்கங்கு உறைகிறேன்.
வலியின் சுவையுணரா மனங்களை
எண்ணி நகைத்தே
மேலும் கொஞ்சம் வலியை தேடி
உணர்வுகள் அழுத்த
உறைந்திருக்கிறேன்

Tuesday 9 October 2018

மேற்பரப்பில்
சலனங்கள் ஏற்படுத்தி விட்டே
ஆழத்தில் அமர்கிறது
குளத்தில் எறிந்த கல்.

Tuesday 2 October 2018

விதைபோடாமலே முளைத்த
மழைக்காளான் சொல்கிறது
உயிர்ப்பித்துக் கொண்டேயிருக்க விழையும்
மண்ணின் ஆசையை.