Monday 29 July 2019

இருவர் எழுதிய கவிதையில் எது யாருடைய சொல்?
வெள்ளைத்தாளெனக் கிடந்த பொழுதொன்றில்
வார்த்தைகள் ஏதுமற்றா இருந்தோம்?
ஒரு சொல்லென்பதென்ன?
உயிரும் மெய்யும் சேர்ந்ததுதானே.
துவங்கும் அக்கணத்தில்
உயிர் நீயென ஓரெழுத்தைத் தருகிறாய்
மெய் கொண்டு நானிணைய
சொல்லொன்று சிலிர்த்தெழ
ஆயுத எழுத்தை அங்கங்கே வீசிச்
சமரொன்றைத் தொடங்குகிறாய் சடுதியில்.
ஈறுபோதலென உடை களைகிறேன்
இடையுகரம் எதுவென இடையளக்கிறாய்.
ஆதி நீடலென முதல் முத்தமொன்றை
முடிக்காமல் தொடருகிறோம்.
தன்னொற்றென ஒட்டிக்கொண்டு
முன்நின்ற நின் மெய் தழுவுகிறேன்.
இணையவும்  இயல்பே என
இணைந்த நாம் பிரிந்திலோம்.
தழுவலும் தழுவல் நிமித்தமுமாய்
ஈருயிர் ஓர் மெய்யான
பொழுதொன்றில் பிறந்த இக்கவிதையில்
எது யாருடைய சொல்?

No comments:

Post a Comment